“தளிர்” ஆண்டு விழாவில் டாக்டர் போல் ஜோசெப்
“தளிர் சஞ்சிகை தனக்கென தனிப்பாதை வகுத்து, சவால்களை சாதனையாக்கி வெற்றிகரமாக வெளி வந்து ஓராண்டினை நிறைவு செய்துள்ளது. அதன் ஆசிரியர் சிவமோகனும், துணைவியார் நந்தினியும் நீ பாதி, நான் பாதியென சிவசக்தியாக ஒன்றிணைந்து செயலாற்றி வருவது பாராட்டுக்குரியதாகும். கலாநிதி பாலசுந்தரம், கதிர் ஒளி ஆசிரியர் திரு.போள் ராஜபாண்டியன், டாக்டர் கென் சந்திரா, வீடு விற் பனை முகவர் திரு.சங்கர் மாணிக்கம் ஆகியோரது பேராதரவினால் “தளிர்” மேலோங்கி வருகின்றது.
ஆசிரியர் சிவமோகனின் சிந்தனை தளிர் துளிர் விட எழுத்தாளரும் பத்திரிகையாளருமான வீரகேசரி மூர்த்தி, சிந்தனைப் பூக்கள் பத்மநாதன், கலாநிதி பாலசுந்தரம் ஆகியோர் தொடர்ந்து எழுதி ஆதரவு வழங்கி வருகின்றனர்.
கடந்த 15ம் திகதி மாலை ஸ்காபுறோவிலுள்ள Queen Palace Banquet Hall மண்டபத்தில் நடைபெற்ற “தளிர்”சஞ்சிகையின் முதலாவது ஆண்டு நிறைவு விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய பல்கலை வேந்தரான டாக்டர் போல் யோசெப் இவ்வாறு கூறி னார்.
விழாவிற்கு தலைமை தாங்கிய பேராசிரியர் பாலசுந்தரம் உரையாற்றிய போது “இளைஞரான சிவமோகன் மட்டக்களப்பில் இருந்த போது வீரகேசரியின் நிருபராகப் பணியாற்றியதோடு ஒரு மலரையும் வெளியிட்டு வந்தார். அதே ஆர்வத்துடன் இங்கேயும் காலாண்டு சஞ்சிகையான தளிரை வெளியிட்டு வருகின்றார். இந்த இளைஞரின் முயற்சிக்கு நாம் அனைவரும் கை கொடுத்து, வழி சமைத்து ஆதரவு வழங்க வேண்டும். வீடு விற்பனை முகவரான திரு.சங்கர் மாணிக்கம் இவருக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றார். அவரைப் போன்ற பலரின் ஆதரவுடன் “தளிர்” பல்லாண்டு தொடரும்” எனக் கூறினார்.
பல்லின பத்திரிகையாளர் சங்கத் தலைவரான திரு.தோமஸ் சாராஸ் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவினை ஆரம்பித்து வைத்தார். அவருடன் கவிஞர் கந்தவனம், வீரகேசரி மூர்த்தி ஆகியோரும் குத்து விளக்கேற்றினார்கள். நாட்டிய தாரகை செல்வி பவித்திரா தவராசாவின் பரத நாட்டியத்துடன் விழா நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. தளிருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் கதிரொளி ஆசிரியர் திரு.போள் றாஜபாண்டியன், டாக்டரும் எழுத்தாளருமான திரு.போல் ஜோசெப், வீரகேசரி மூர்த்தி, சிந்தனைப் பூக்கள் பத்மநாதன், கவிஞர் கந்தவனம், அகணி, வித்துவான் க.ஞானரெத்தினம் ஆகியோர் உட்பட பல எழுத்தாளர்களும், பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வி றாதிகா சிற்சபைஈசன், மார்க்கம் மாநகர சபை உறுப்பினர் திரு. லோகன் கணபதி, விஜே ரி.வி. சுப்பர் சிங்கர் புகழ் செல்வி ஜெசிக்கா யூட்ஸ் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். செல்வி ஜெசிக்காவின் பெற்றோரும் விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.
பலலவேறு கலை நிகழ்ச்சிகளுடனும், இராப் போசன விருந்துடனும் விழா இனிதே நிறைவெய்தியது.
(வீரகேசரி மூர்த்தி)