ஒருவர் முதுமையாகவும், இளமையாகவும் இருப்பது போல் காட்டுவது ரத்த குழாய்கள் தான். ரத்தக்குழாய்களின் ஆரோக்கியம் தான் நம் உடலின் ஆரோக்கியம். உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை, ரத்தக் குழாய்கள் தான் திசுக்களுக்கு ரத்தத்தை கொடுக்கின்றன.

கண்ணுக்கு புலப்படாத பல லட்ச நுண் ரத்தக்குழாய்கள் உடலில் உள்ளன. இதயத்தின் இடது பகுதியில் துவங்கும் ரத்தக் குழாய் மகா தமனியாக வெளியே வந்து உடலுடன் எல்லா உறுப்புகளுக்கும் பிரிவுகளாக சென்று ரத்தம் கொடுத்து, உடலிலுள்ள உறுப்புகள் அனைத்தையும் உயிர் வாழ வைக்கிறது.

இது ஆரோக்கியமாக இருந்தால், மனிதன் ஆரோக்கியமாக இருக்க முடியும். நமது உடலில் உள்ள திசுக்கள் அழியும் தன்மை உடையது. நமது உடலில் உள்ள தோல் நமக்கு தெரியாமல் உதிர்ந்து புதிய மேல் தோல் திசுக்கள் உண்டாகின்றன்.

பல்லாயிரக்கணக்கான நுண் ரத்த நாளங்கள் இருக்கின்றன. இவைகள் ஆரோக்கியமாக சுருங்காமல் இருந்தால், தோல் சுருங்காமல் இளமையாக இருக்கும். இதே போல் மற்ற உறுப்புகளின் ஆரோக்கியமும் நிர்ணயிக்கப்படுகிறது.

நம் வாழ்க்கை தரம், தனி மனித ஒழுக்கம், நடை பயிற்சி, யோகா, இயற்கையான உணவு வகைகள், அமைதி, பொறுமை, எளிமை ஆகியவை உடலில் உள்ள ரத்த நாளத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.புகை பிடித்தல், போதை வஸ்துக்கள் உபயோகப்படுத்துவது, சீட்டாடுவது, விபசாரிகளோடு சகவாசகம் வைத்து, நெறியற்ற வாழ்வு வாழ்வது ஆகியவை, ரத்த நாளத்தை இறுக்கிவிடும்.இதனால் இதயம், சிறுநீரகம், மூளை, கண் சிதைவு ஆகியவை ஏற்படுகின்றன. இதனால் நடு வயது மரணம் ஏற்படுகிறது.

தமனி இறுக்க நோய் எந்த வயதில் வருகிறது . . .

இந்த நோய் தாக்குவதற்கு காரணங்கள் பல உள்ளன. ரத்தக் குழாய், ரப்பர் குழாய் போல விரிவடைந்து, சுருங்கும் தன்மை கொண்டது. எந்த அழுத்தத்தையும் தாங்கும் தன்மை கொண்டது. இந்த தன்மை கொண்ட ரத்த குழாய், ரத்த இறுக்க நோயால் இரும்பு குழாய் போல ஆகிவிடுகிறது.

இதற்கு காரணங்கள் நிக்கோடின் என்ற நச்சு பொருள், ரத்த நாளத்தின் உட்சுவரான என்டோ தீலியத்தை பாதித்து விரிசல் உண்டாக்கி விடுகிறது. விரிசலில் கெட்ட கொழுப்பு நுழைந்து ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுத்துகிறது.

உடற்பயிற்சி, நடை பயிற்சி இல்லாததால் ரத்தக் குழாய் நலிவடைந்து விடுகிறது. அதிகமாக கொழுப்புள்ள மாமிசம், உணவு வகையிலுள்ள கெட்ட கொழுப்புகள், ரத்த நாளத்தில் படர்ந்து தடித்து விடும். இதனால் நிரந்தரமாக ரத்த அழுத்தம் ஏற்பட்டு விடுகிறது.ரத்த அழுத்தத்தை குணமாக்க முடியாது. கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

இளமையில் உடலிலுள்ள ரத்தக் குழாய்கள் அனைத்தும் சுருங்கி விரியும் தன்மை கொண்டதாக உள்ளது. இதனால் ரத்த ஓட்டம் சீராக உடலிலுள்ள எல்லா பகுதிகளுக்கும் செல்கிறது. இந்த தனித் தன்மையை காப்பாற்றுவது தான் மிக முக்கியமானது.

உணவு வகைகள், பணம் அதிகமாக கிடைக்கிறது என்று மது குடிப்பது, புகை பிடிப்பது, போதை வஸ்துக்கள் உட்கொள்வது, சோம்பேறியான வாழ்க்கை ஆகியவை ரத்த நாளத்தை பாதித்து விடும்.யிர், வெண்ணெய், நெய் வைத்த பாத்திரத்தை அவை உபயோகித்த பிறகு, பாத்திரத்தின் உட்சுவரில் ஒட்டி இருப்பது போல தான் இந்த கெட்ட கொழுப்பு படர்ந்து, ரத்த குழாயை சேதப்படுத்துகிறது.

சிறுநீரகம் சிறப்பாக செயல்படும் . . .

இளமை பருவத்தில் இருக்கும் ரத்தக் குழாயை பாதுகாத்து, அதே வடிவத்தில் கொண்டு செல்பவன் தான் ஆரோக்கியமான மனிதன். உடற் பயிற்சியால் ரத்த ஓட்டம் அதிகமாகிறது. காரணம் ரத்தக் குழாய் சுருங்கி விரிவடையும் தன்மை பாதுகாக்கப்படுகிறது.இதயமும், பலமுள்ளதாக பாதுகாக்கப்படுகிறது.

இதயத் துடிப்பு காரணமாக, கரோனரி ரத்தக் குழாய் அடைப்பு ஏற்படுவதில்லை. மேலும் ரத்த ஓட்டம் போதுமான அளவு சிறுநீரகத்திற்கு சென்று சிறுநீரகத்தை பாதுகாக்கிறது. உடற்பயிற்சி செய்தவுடன், சிறுநீர் உந்துதல் ஏற்பட்டால், அது சிறுநீரகம் நன்கு செயல்படுகிறது என்பதற்கான அறிகுறி.

உடற்பயிற்சி செய்யும் போது, சுத்தமான பிராண வாயு, மூளைக்கு செல்வதால் மூளை புத்துணர்வு பெறுகிறது. உடல் முழுவதும் புத்துணர்வு பெற்று சுறு சுறுப்பாகிறது. இந்த உண்மை எத்தனை பேருக்கு தெரிகிறது. எல்லாரும் நடைப் பயிற்சிக்கு செல்கின்றனர். நாமும் செல்வோம் என ஷு போட்டு போவது தான் முக்கியமாக தெரிகிறது.

கோவில் குளங்களில் தண்ணீர் படியில் கால் வைக்கும் போது ஜாக்கிரதையாக வைக்கிறோம. காரணம், தண்ணீர் தேங்கிய படிகளில் பாசி படர்ந்து விடுகிறது. இதனால் கால் வழுக்கி குளத்தில் விழ வேண்டிய நிலை ஏற்படுகிறது. அது போல ரத்தக் குழாய் ரத்த ஓட்டமில்லாமல் இருந்தாலோ இல்லை ரத்த ஓட்டம் குறைவாக இருந்தாலோ, ரத்தத்திலுள்ள கெட்டக் கொழுப்பு, சர்க்கரை, ரத்தக் குழாய் சுவரின் உட்பகுதியில் படர்ந்து விடுகின்றன.

நாளடைவில் ரத்தத்தில் உள்ள தாதுப் பொருள்கள் அதன் மீது படிந்து கட்டியாக மாறிவிடும். இதனால் மாரடைப்பு, மூளை ஸ்ட்ரோக், சிறுநீரக செயலிழப்பு, கால் மரத்து போதல் போன்ற சிக்கல் ஏற்படுத்தும்.

முதுமையில் ஒருவர், நீண்ட நாள் படுக்கையில் இருந்தால் காலிலுள்ள ரத்த நாளத்தில் ரத்த ஓட்டமில்லாமல் ரத்தம் உறைந்து கட்டியாகி நுரையீரல், தமணி அடைப்பு ஏற்படுத்தி, திடீர் மரணத்தை ஏற்படுத்துகிறது. இதே போல நீண்ட நேரம் கார் பயணம், விமான பயணத்தின் போது, ரத்த உறைய வாய்ப்பு உள்ளது. முதுமையில் ஏற்படும் விளைவுகள் இவை. எப்போதும் சுறு சுறுப்பாக இருக்க வேண்டும். பந்து போல எழும்பி வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

சமீபத்திய ஆய்வில் 60 முதல் 80 வரையுள்ள சுறு சுறுப்பானவர்கள், தினம் நடைப் பயிற்சி, நல்ல உணவு வகை உண்டு, எளிமையாக எங்கும், எப்போதும் எழுந்து நடமாடி தூய்மையான எண்ணங்களுடன், சமுதாய நல குறிக்கோளுடன் தனி மனித ஒழுக்கத்துடன் திகழ்வதாக தெரிய வந்துள்ளது என்கிறார் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தி ஹால்ஸ்டட் சர்ஜிகல் கிளீனிக் இயக்குனர் டாக்டர் சி.எம்.கே.ரெட்டி.

ரத்த குழாயில் கொழுப்பு சேர்ந்து அடைப்பு ஏற்படுவதை தடுக்க, புதிய நானோ துகள்களை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். ரத்தத்தில் கொழுப்பை சுமந்து செல்லும் துகள்கள் ரத்த குழாயில் படிந்து விட்டால் அதை ‘கெட்ட கொழுப்பு’ என்றும், கொழுப்பை கல்லீரல் வரை எடுத்து சென்றால் அதை `நல்ல கொழுப்பு’ என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆன்ட்ரீ நெல் தலைமையிலான விஞ்ஞானிகள், நானோ தொழில் நுட்பத்தில் தங்கத்தை சேர்த்து செயற்கை துகள்களை உருவாக்கியுள்ளனர்.

இந்த செயற்கை துகள்களை ரத்தத்தில் செலுத்தினால் அவை ரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் செய்கிறது. அதுமட்டுமல்லாது, ரத்த குழாயில் படிந்துள்ள கொழுப்பையும் சுத்தம் செய்கிறது. தற்போது சோதனைக் கூட அளவில் இருக்கும் இந்த துகள்கள் பல விதங்களிலும் பயன்படுத்துவது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.