இந்திய நாட்டுத் தென் பகுதியிலே – ஓர்
        இன்பத் தீவொன்றினைக் கண்டிடுவோம்
        ஏற்றமுடைய அத்தீவினிலே பலர்
        என்றும் வளத்துடன் வாழ்ந்தனரே

        கன்னலும் செந்நெல்லும் காய்கறியாவுமே -யாரும்
        களிப்புடன் அத்தீவில் பெற்றிடலாம்
        மின்னும் மரகதம் மேலான முத்துக்கள் 
        இன்னும் பல வளம் அங்குண்டு காண்

        சைவத் திருக்கோயில் பற்பலவாம் – அங்கு
        பௌத்த விகாரைகள் பற்பலவாம்
        யேசு மரித்தாயின் தேவாலயங்களும்
        சிறந்த பள்ளி வாசலுமுண்டாம்
        ஈழமெனப் பெயர் பெற்றவளாம் – அவள்
        இலங்கை எனப் பெயர் கொண்டவளாம்
        சூழும் அலை கடல் அவள் உடையாம் நல்ல
        சுந்தரக் கோயில்கள் அவள் அணியாம்

        சீனம் முதலான தேசங்களோடவள் – அன்று
        சிறப்பாய் வியாபாரம் செய்திருந்தாள்
        வானம் முட்டப் புகழ் பெற்றிருந்தாள்
        அவள் வளத்தைக் கலக்கினர் ஜரோப்பியர்

        கண்ணீர் வடித்துக் கலங்கிடும் காரிகை -தன்
        கண்ணைத் துடைத்துக் கலங்குகின்றாள் அவள்
        கண்ணீர் துடைப்பவர் யாருமில்லை அவள்
        கவலை தணிக்கவோ யாருமில்லை

        என்ன பழி செய்தேன் யானு மென்றே – அவள்
        ஏங்கித் தவிக்கிறாள் மனதினுள்ளே 
        இல்லையோ தெய்வமும் இவ்வுலகில்
        என் துணையாரென மயங்குகிறாள்.