‘ஆரோக்கிய வாழ்வு’ மருத்துவ நூல் வெளியீட்டு விழாவோடு அமரர் சிவானந்தசிங்கம் அவர்களின் மறைவை நினைவு கூரும் நாளாக விளங்கிய அன்றைய நிகழ்வு கடந்த 24-11- 2024 அன்று கனடா ஸ்காபுறோவில் அமைந்துள்ள ஒன்றாரியோ- தமிழிசைக் கலா மன்ற மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு சட்டத்தரணி தம்மையா ஶ்ரீபதி அவர்கள் தலைமை வகித்தார்.

“இன்று எம்மால் நினைவு கூரப்படுபவரும் கொண்டாடப்படுபவருமான அமரர் கே.ஜி.சிவானந்தசிங்கம் அவர்கள் பணியாற்றிய வந்த துறையோ நீர்பாசன பொறியியல் துறையாகும். தனது தொழில் சார்ந்த காலப்பகுதியில் இலங்கையில் பல இடங்களிலும் அவர் மண்ணியல் மற்றும் நீர்பாசன விஞ்ஞானம் ஆகியவற்றில் முத்திரை பதித்திருந்தாலும். தந்தையின் முழுநேரப் பணியான சித்த ஆயுர்வேத வைத்தியத்துறையில் ஆர்வம் கொண்டு தனது தந்தையிடமிருந்து அதன் நுட்பங்களையும் அவசியத்தையும் அதற்குள் அடங்கியிருக்கின்ற மனித நேயத்தையும் கற்று தான் கற்றவற்றை தனது மறைவிற்குப் பின்னால் மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக இன்று அவரது துணைவியார் ஜெயா மற்றும் அவரது புத்திரச் செல்வங்கள் ஆகியோர் இந்த நூலை வெளியிட்டு வைக்கின்றார்கள்.

அமரர் சிவானந்தசிங்கம் அவர்களது கனவு இவ்வாறான மருத்து குறிப்புக்கள் மற்றும் உடல் நலன் பேணும் தகவல்களை அறிந்தும் பின்பற்றியும் வந்தால் ஆரோக்கியமாக வாழலாம் என்ற அவரது உயரிய எண்ணமே இன்று ஓரு நூலாக வெளிவருகின்றது. மருத்துவ துறை சார்ந்த பலர் இங்கு வருகை தந்துள்ளார்கள்.

இதன் மறுபக்கத்தில் நாம் ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.தமிழர்களைப் பொறுத்தளவில் சித்த ஆயுர்வேத வைத்தியமும் ஒரு தொழில் என்பதற்கு அப்பால் எமது பண்பாட்டின் அடையாளமாகும். அதை ஒரு தொழிலாகச் செய்யாமல் தான் சார்ந்த சமூகத்தின் ஆரோக்கியம் கருதி தனது வாழ்நாளை அர்ப்பணித்த ஒரு தந்தையின் மகனாகப் பிறந்த அமரர் கே.ஜி.சிவானந்தசிங்கம் அவர்களின் வாழ்வும் தமிழர் பண்பாட்டுக்கு சமாந்தரமாகவே பயணித்துள்ளது என்பதை நாம் நன்கு உணரலாம். . இந்த கௌரவம் அவரது மறைவிற்குப் பின்னராக ஒரு உயர் மரியாதை என்பதும் குறிப்பிடத்தக்கது” என்று புகழாரம் சூட்டினார்.

ஆரம்ப உரையை நண்பர் சோம. சச்சிதானந்தன் அவர்கள் நிகழ்த்தி பேச்சாளர்களை மேடைக்கு அழைத்தார்.

கலாநிதி பால சிவ.கடாட்சம். ஆசிரியர் தங்கராஜா சிவபாலு டாக்டர் போல் ஜோசப் மற்றும் ரவீந்திரன். கோ.கைலைநாதன் (கனடா-புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர்) ஆகியோரும் அங்கு உரையாற்றினார்கள்.

நினைவு கூர்தல் நிகழ்வின் இறுதியில் ‘ஆரோக்கிய வாழ்வு’ நூலின் பிரதிகள் அங்கு கலந்து கொண்டவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பெற்றன.