ஒளவைக் கிழவி அருமூதாட்டி
அன்றோர் நாளில் அரும்பிய சொற்கள்
இன்று என் நினைவில் எழுபவையாகும்
எவ்விடமாயினும் எங்கெங்கிருப்பினும்
பண்புடன் நாமும் பயன்தரும் வினைகளை
ஏற்றமாக இயற்றிடுவோ மெனில்
பலன் கருதாத பண்பைப் பெற்று
பணிவுடன் வாழப் பழகிடுவோமெனில்
தன்னடி உண்ட தண்ணீரைத் தான்
தாங்கித் தலை மேல் இளநீராகத்
தாகம் தீர்க்கும் தண்சுவை நீராய்
தேங்காய் வழுவலாய்ச் சிறப்புடன் முதிரும்
சொட்டாய்த் துருவலாய்த் தோன்றும் பாணியில்
வேறு வேறுணவுச் சத்துடன் சேர்ந்து
வேண்டியவாறு விரும்பியே மனிதர்
உண்பொருளாக உதவிடு மந்தத்
தென்னை மரத்தின் சிறப்பினை உணர்வோம்
இன்று நாம் செயும் இன்வினையெல்லாம்
நன்று நமக்கு நாளை பயன் தரும்
பயமே வேண்டாம் படைத்தவன் காப்பான்.