கடந்த திங்கட்கிழமை 10-12-2015 கனடா தமிழர் தகவல் சஞ்சிகையின் ஆதரவில் ஆனந்த விகடன் வெளியீட்டகத்தின் பிரசுரமான “சந்திரஹாசம்”; – நாவல் வெளியீட்டு விழா மார்க்கம் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்திய சாகித்ய மண்டல பரிசு பெற்றவரும், “காவல் கோட்டம்” நாவலை எழுதியவருமான திரு.சு.வெங்கடேசன் அவர்களால் எழுதப்பெற்று, பிரபல ஓவியர் க.பாலசண்முகம் அவர்களின் ஓவியங்களோடு நவீன கிராஃபிக் தொழில் நுட்பத்தால்
புத்தகத்துக்குள் ஒரு சினிமாவையும் ஓட வைத்து ஆனந்த விகடன் தயாரித்த மிகப்பெரியதும் தமிழுக்குப் புதியதுமான “சந்திரஹாசம்”; என்ற நாவலை உலகம் முழுவதும் தெரியப்படுத்தும் முகமாக ஆனந்த விகடன் குழுமத்தின் நிர்வாக அதிபர் திரு.ப. சிறினிவாசன் அவர்களும், அதன் ஆசிரியர் ரா.கண்ணன் அவர்களும் தொழில்நுட்ப இயக்குனரும் வருகை தந்திருந்தார்கள்.
குறுகிய கால அறிவிப்போடு தமிழர் தகவல் வெளியீட்டகமும், அதன் ஆசிரியர் திரு. திருச்செல்வமும் இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். விழாவிற்கு தமிழர் தகவல் ஆசிரியர் திரு. திருச்செல்வம் அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றும்போது, ஆனந்த விகடனின் ரிஷி மூலத்தை அழகாக எடுத்துப் பேசியதோடு இந்நூல் வெளியீடும் அல்ல விமர்சனமும் அல்ல பெருமுயற்சி ஒன்றை உலகெங்கும் உள்ள வாசகர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்ளும் ஆனந்த விகடனின் விழாவென்றும், தமிழர் தகவல் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் வேண்டுகோளுக்கமைய தமிழர் தகவல் வெளியீட்டகம் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்தது என்றும் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து பேராசிரியர் திரு.பசுபதி அவர்கள் தனது பேச்சின் கருப்பொருளாக ஆனந்த விகடன் ஓவியச் சிறப்பை எடுத்துக் கொண்டார். ஆனந்த விகடனின் தோற்றம் அதற்காக வாசன் அவர்கள் பட்ட துன்பங்கள் என்று தொடங்கி மாலி போன்றவர்களின் ஓவியங்களால் தான் பல எழுத்தாளர்களின் முகங்கள் விகடனில் வெளிச்சத்தில் தெரிந்தது. ஆனந்த விகடன் தீபாவளி மலர் தொடக்கம் அதன் சிறப்பு என்று விகடன் வரலாற்றை விரல் நுனியில் வைத்துக் கொண்டு பேசியபோது விகடன் குழுமத்தினரே அவரை வியப்போடு பார்த்தார்கள்.
இலங்கை தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் நிகழ்ச்சிப் பணிப்பாளர் திரு. பி. விக்னேஸ்வரன் அவர்கள் தொடர்கதைகளுக்காகவே தான் ஆனந்த விகடனை நேசித்ததாகச் சொல்லி கல்கி, ஜெயகாந்ன், சாவி போன்ற இலக்கிய ஜாம்பவான்களை விகடன் அறிமுகப்படுத்திய சாதனைகளைப் பகிர்ந்து கொண்டார்.
“சந்திரஹாசம்”; நூலிலிருந்து முன்னுரையை யாராவது விழாவில் படித்துக் காட்டுவார்களா என்று விகடன் அதிபர் திடீரென்று கேட்டபோது ஆம்! இந்தக் கனடா நாட்டிலே பிறந்து படித்து ஆங்கிலப் புலமைமிக்க இளம் பிள்ளைகள் பலர் தமிழிலேயும் சரளமாகப் பேசக்கூடியவர்கள். அதற்கான ஒழுங்கை உடனடியாகச் செய்கின்றோம் என்று ஏற்றுக் கொண்ட தமிழர் தகவல் ஆசிரியர், தன் மருமகளும் நாட்டியக் கலைஞருமான செல்வி அனோஜினி குமாரதாசனிடம் அப்பணியை ஒப்படைக்க அவர் மேடையில் தங்கு தடையின்றி அழகாக வாசித்துக் காட்டினார்.
அடுத்து விகடன் அதிபர் திரு.ப. சிறினிவாசன் தனது உரையில் தற்காலத் தொழில் நுட்பம் அனைத்தையும் பயன்படுத்தி மீகுந்த பொருட்செலவில் இந்த நூலை வெளியிடுகிறோம். உங்கள் அனைவரது ஆதரவும் இதற்குத் தேவை என்றார். உரையின் இடையிடையே வீடியோ காட்சிகளாகவும், நிழற்படங்களாகவும் பாலசண்முகத்தின் சந்திரஹாச ஓவியத்தை திரையில் காட்டிக் கொண்டே சென்றார். தன் பேச்சின் இடையே விகடன் இதழை இன்று தாங்கி நிற்பது முன்னாள் ஆசிரியர் பாலசுப்பிரமணியம் தொடங்கிய மாணவ பயிற்சித் திட்டத்தில் உருவான மாணவர்களே என்பதையும் கோடிட்டுக் காட்டி தன்னோடு வந்திருந்த விகடன் ஆசிரியர் ரா.கண்ணன் அவர்களுக்கு ஒரு முகவரி கொடுத்தார்.
அடுத்துப் பேசிய ரா.கண்ணன் தான் விகடனின் மாணவ பயிற்சித் திட்டத்தில் இணைந்து இன்று விகடன் ஆசிரியராக இருப்பதை வெகு இயல்பாக எடுத்துப் பேசினார்.
இறுதியாக நன்றியுரையை பொன்னையா விவேகானந்தன் வழங்கினார். இவ் விழாவுக்கு வாசகர்கள் மட்டுமன்றி பல இலக்கிய கர்த்தாக்களும், எழுத்தாளர்களும் வந்திருந்தார்கள்.நன்றியுரையில் விழாவில் கலந்து சிறப்பித்தவர்களுக்கும், குறிப்பாக இந்நிகழ்வு நடைபெற முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வை நேரடியாக “அனலை எக்ஸ்பிறஸ்” ஒளிபரப்புச் செய்தது குறிப்பிடத் தக்கது. இறுதியில் விழா இனிதே நிறைவடைந்தது.
நிகழ்வில் “சந்திரஹாசம்”; நாவலின் முன்னுரை வாசிக்கப்பட்டது. அதனை கீழே தருகிறோம்.
தென்னிந்தியாவின் பெரும் சாம்ராஜ்ஜியமாக நிலைகொண்டிருந்த சோழச் சாம்ராஜ்ஜியத்தின் மாமன்னன் மூன்றாம் ராஜேந்திர சோழனை வென்று ( கி.பி. 1279) பாண்டியப் பேரரசை நிறுவினான் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன். இவ்வெற்றியின் மூலம் சோழப்பேரரசு மறைந்து, இரண்டாம் பாண்டியப் பேரரசு உதயமானது. அவனுக்குப் பின் அவனது மகன் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியில் அமர்ந்தான். அவனது காலத்தில் பாண்டிய நாடு புகழின் உச்சியை அடைந்தது. சோழமண்டலம், கொங்கு தேசம், தொண்டை நாடு, கொல்லம், நெல்லூர், இலங்கை வரையிலான பகுதி அவனது ஆளுகையின் கீழ் இருந்தது. அவன் முக்கடலையும் ஆளும் சக்கரவர்த்தியாக விளங்கினான்.
அவனது ஆட்சி காலத்தில் தான் சீனப் பேரரசர் குப்ளாக்கானின் தூதுவனாக மார்க்கோ போலோ பாண்டிய நாட்டுக்கு வருகை தந்தான். பாண்டிய நாட்டைப் பற்றியும், மதுரையின் செல்வச் செழிப்பைப் பற்றியும் வியக்கத்தகு முறையில் ஒரு நேரடி வர்ணனையைப் பதிவு செய்தான் மார்க்கோ போலோ.
குலசேகர பாண்டியனின் காலத்தில் நடந்த இலங்கைப் போர் குறிப்பிடத்தகுந்தது. போரில் வெற்றிபெற்று அங்கு இருந்த புத்தபிரானின் புனிதப்பல்லை மதுரைக்கு எடுத்து வந்தனர். அதன் பின்னர் இலங்கை வேந்தன் பராகிரமபாகு வந்து இறைஞ்சிக் கேட்டு அப்புனிதப்பல்லை பெற்றுச் சென்றான்.
நீண்டகாலம் புகழ்மிகு ஆட்சியை நடத்திய குலசேகர பாண்டியனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்த மனைவியின் மகன் சுந்தரபாண்டியன். இரண்டாம் மனைவியின் மகன் வீரபாண்டியன். அறிவுத்திறனும், ஆற்றலும் ஒருங்கே கொண்டவனாக வீரபாண்டியன் திகழ்கிறான் எனக்கருதி மன்னன் எடுத்த முடிவுகள் சுந்தரபாண்டியனை பெரும் ஆத்திரத்துக்கு உள்ளாக்கியது.
அவன் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத மாபாதகச் செயலைச் செய்யத்துணிந்தான். குடும்பத்துக்குள் உருவான மோதல், ஒரு பெரும் பேரரசையே வரலாற்றில் இருந்தே அப்புறப்படுத்தும் நிலையை ஏற்படுத்தியது. புகழின் உச்சத்தைத் தொட்ட ஒரு தேசத்தின் மீது துயரத்தின் காரிருள் சூழ்ந்தது. அத்தகைய சூழலிலும் துரோகத்தையெல்லாம் மிஞ்சும் வகையில் பிரகாசமாக ஒளிவீசியது ஒரு மாவீரனின் வீரசாகசம்.
பாண்டியர்களின் குலவாள் சந்திரஹாசத்தில் பட்டுத்தெறிக்கும் ஒளியில் இருந்து அந்த மகத்தான வீரக்கதை எழுதப்பட்டது. அந்தக்கதையே “சந்திரஹாசம்”. –நன்றி விகடன்