பேராசியர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்களின் “பண்டைத்தமிழர் பண்பாடு–ஒருபுதியநோக்கு” – நூல்வெளியீடு
ஈழத்தமிழர் புகலிடம் தேடிக்கொண்ட நாடுகளில் கனடாவிலேயே பெருந்தொகையினராக வாழ்கின்றனர். இவர்கள் இந்நாட்டில் கிடைக்கும் வசதிகளை நன்கு பயன்படுத்தி, தத்தம் துறைகளில், தம்திறன்களை வளர்த்துச் சிறப்பாக வாழ்கின்றனர். அந்த வகையில் ஆக்க இலக்கியகாரரும் இந்நாட்டின் எழுத்துச் சுதந்திரம், பொருளாதார வளம், தமிழ்க் கணினிப் பயன்பாடு என்பவற்றைப் பயன்படுத்தி, தமது துறைசார்ந்த நூல்களை வெளியிட்டு வருகின்றனர். இவ்வகையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 25.09.2016 மாலை ஸ்காபரோ பெரியசிவன் கலாட்சார மண்டபத்தில் பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்களின் ‘பண்டைத் தமிழர் பண்பாடு–ஒரு புதியநோக்கு’ – நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இவ் வெளியீட்டு விழாவில் தமிழர் மரபுப்படி ஐவர் மங்கையர் மங்கல விளக்கு ஏற்றினர். அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து, கனடா தேசியகீதம்,அமைதி வணக்கம் என்பன இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து திருமதி விமலா பாலசுந்தரம் வரவேற்புரை வழங்கும்போது அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்: “மொழியும் பண்பாடும் எல்லா இனத்தவராலும் பேணப்பட வேண்டியவையாகும். இவை பின்பற்றப்படாத போது அந்த இனம் தனது அடையாளத்தை இழந்துவிடுகிறது. ஈழத்தமிழர்; இந்த நாட்டில் கனேடிய நீரோட்டத்தோடு இணைந்து சிறப்பாக வாழும்போது தமது பண்பாட்டு விழுமியங்களையும் பின்பற்றியே வருகின்றனர். இருப்பினும் எமது இளந் தலைமுறையினரும் எதிர்கால சந்ததியினரும் எமது பண்பாட்டு விழுமியங்களை நன்கு அறிந்தவர்களாக, அவற்றைத் தமது வாழ்க்கையில் ஓரளவுக்காயினும் பின்பற்றி வருதற்கு பண்பாட்டு வரலாற்றையும், பண்பாட்டு விழுமியங்களையும் எடுத்துரைக்கும் வகையில்; இன்று வெளியிடப்படுகின்ற “பண்டைத்தமிழர் பண்பாடு–ஒருபுதியநோக்கு” என்ற நூல் காலத்தின் தேவையாக அமைகிறது” எனக் குறிப்பிட்டு பேச்சாளர்களையும் அவையோரையும் வரவேற்று தனது உரையை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து ரொறன்ரோ ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத்தின் பிரதமகுருக்கள் சிவஸ்ரீ தியாகராஜக் குருக்கள் கணேஸ்வாமி அவர்கள் பேராசிரியர் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்து, தனது ஆசியுரையை வழங்கினார்கள். கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தினர் ஒழுங்கு செய்துள்ள இவ்விழாவுக்கு இணையத்தின் துணைத்தலைவர்; திரு குரு அரவிந்தன் அவர்கள் தலைமை தாங்கித் தம் உரையை வழங்கினார். பேராசிரியர் அவர்களின் பல்துறைசான்ற சிறப்புக்களை எடுத்துரைத்ததோடு, பேராசிரியர் ஏற்கனவே கனடாவில் வெளியிட்ட ‘இலங்கை இடப்பெயர் ஆய்வு- யாழ்ப்பாணமாவட்டம்’ என்ற நூலின் சிறப்புக்களைக் கூறி, இன்று வெளியிடப்படும் நூல் போன்று, இன்னும் அரியபல நூல்களையும் அவர் எழுதவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
தேசபாரதி கவிஞர் தீவகம் இராஜலிங்கம் அவர்கள் வாழ்த்துப் பாமடல் வழங்கி நூலாசிரியருக்கு மதிப்பளித்தார். அதனைத் தொடர்ந்து உதயன் பத்திரிகை பிரதம ஆசிரியர் திருஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்கள் நட்புரை வழங்கினார். அவ்வுரையில் பேராசிரியர் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இருந்த காலத்திலிருந்து அறிவேன் என்றும், அவரது கலை ஆர்வத்தையும் நாடுசார்ந்த செயற்பாடுகளையும் கூறி. பேராசிரியர் கனடாவுக்கு வந்து கடந்த 20ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ச்சியாக அவர் மேற்கொண்டு வரும் கலை, இலக்கியம்,பண்பாடு;, சமூகம் என்ற துறைகள் சார்ந்த பல்வேறுபணிகளையும், அவரது சிறந்த பண்புகளையும் அவையோருக்கு எடுத்துரைத்தார்.
அடுத்து, கனடா தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அதிபரும், வானலையில் தனது இதமான வளமான குரலின் மூலம் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் இதயங்களில் தனது வானொலிக்கென தனியிடத்தைப் பெற்றுக் கொண்டவருமான திரு இளையபாரதி அவர்கள் ‘நூலாசிரியர் அறிமுக உரை’ வழங்கினார். கனடாவில் அனைத்து ஊடகங்களுடனும் நல்ல நட்புறவும் வரவேற்பும் உடைய ஒரு பேராசிரியர் பாலசுந்தரம் ஒருவரே எனக் கூறி அவரது நல்ல பண்புகள் அனைத்தையும் எடுத்துரைத்தார்.
அடுத்து தற்போது அண்ணாமலை கனடா வளாகத்தின் விரிவுரையாளர் முனைவர் திருமதி செல்வம் ஸ்ரீதாஸ் அவர்கள் நூலை அறிமுகம் செய்தார்கள். தமிழர் தகவல் பிரதம ஆசிரியர் திரு. திருச்செல்வம் அவர்கள் வெளியீட்டுரையை வழங்கினார்.
பேராசிரியர் பாலசுந்தரம் அவர்கள் தன்னை நெறிப்படுத்திய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்கள் வி. செல்வநாயகம், சு. வித்தியானந்தன், ஆ. வேலுப்பிள்ளை ஆகியோருக்கு இந்நூலை அர்ப்பணம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். அக்கௌரவத்தைப் பெறுவதற்காக அமெரிக்காவின் லஸ்வெகாஸ் நகரிலிருந்து பேராசிரியர் ஆ. சதாசிவம் அவர்களின் மகள் பூங்கோதை பாலராஜன், ரொறன்ரோவில் வாழும் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளையின் மகன் அருளாளன் ஆகிய இருவரும் வருகை தந்திருந்தார்கள். இவ்விருவரையும் மேடைக்கு அழைத்து, முதற் பிரதிகளை வழங்கிக் கௌரவித்தார்.
அதனைத் தொடர்ந்து நூல் மதிப்பீட்டு உரைகள் இடம் பெற்றன. முதலில் ரொறன்ரோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வணக்கத்திற்குரிய ஜோசப் சந்திரகாந்தன் அவர்கள் நூலிற்கான மதிப்பீட்டு உரையில் குறிப்பாக இன்றைய காலக்கட்டத்தில் இந்நூலின் முக்கியத்துவம் – இதன் தேவை என்பனபற்றி விளக்கினார். இளைய தலைமுறையினர் நன்கு அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் இனம்,தமிழ்ப் பண்பாடு,தமிழர் வரலாறு என்பனவற்றின் முக்கியத்துவத்தையும் பண்டைத் தமிழர் வரலாற்றையும் இந்நூல் எடுத்துரைப்பதைக் கூறி, நூலாசிரியரின் எழுத்துப் பணி தொடரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அடுத்து மதுரைத் தமிழ்ச்சங்க உயர்கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் சின்னப்பா அவர்கள் இந்நூற்பொருள் சார்ந்த சிறப்புரையை வழங்கினார். பேராசிரியர் பாலசுந்தரம் அவர்கள் தமிழரின் பூர்வீகத்;தளம் அழிந்த லெமுரியாக் கண்டம் என்பதை மிக்க ஆதாரங்ளுடன் இந்நூலிலே நிறுவியுள்ளதைப் பாராட்டி, இந்தவரலாற்று உண்மையைத் தமிழர் மேலும் நன்கு அறிந்துகொண்டு தம் இனத்தின் பூர்வீகத்தைப் புரிதல் வேண்டும். உலகின் மூத்த நாகரிகம் அடைந்தோர் தமிழரே என்பதை நம்பவேண்டும.; அப்போதுதான் தமிழர் உலகில் சிறந்த இனமாக தலைநிமிர்ந்து நிற்பர் என்பதை இந்நூற் பொருளின் அடிநாதமாக அமைந்த கருத்தைத் துல்லியமாக எடுத்துரைத்தார்.
நூலாசிரியர் தம் ஏற்புரையில், தான் இந்நூலை எழுதுவதற்கு அடிப்படையாக சுவாமிவிபுலாநந்தர், கற்பித்த அவரது பேராசிரியர்கள் ஆகியோரின் எழுத்துக்கள் உந்து சக்திகளாக அமைந்தமை பற்றியும், புலம்பெயர்ந்த நாடுகளில் தம் வரலாற்றையும் பண்பாட்டையும் இழந்து கொண்டிருக்கிற தமிழினத்திற்கு அவற்றை எடுத்தரைத்து. எதிர்காலச் சமூகம் தம்மையார் என உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவும் இந்நூலை அரிதின் முயன்று எழுதியுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்நூலைவெளிட்ட சென்னை மணிமேகலைப் பிரசுரத்தார் இந்நூலை ஏற்கனவே சிங்கப்பூர், கொழும்பு, தமிழ்நாடு ஆகிய இடங்களில் அறிமுகம் செய்துள்ளனர் என்றும், தமிழ்நாட்டிலுள்ள ‘சேக்கிழார் ஆய்வுமையம்’ இவ்வாண்டுக்குரிய சிறந்த நூலாக தனது நூலைத்தெரிவு செய்து முதற் பரிசும் பொற்கிழியும் வழங்கிக் கொளரவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இறுதியாக கனடா எழுத்தாளர் இணையச் செயலாளர் திரு. சின்னையா சிவநேசன் அவர்கள் நன்றியுரையை வழங்கினார். டாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்கள், இந்நிகழ்ச்சியைச் சிறப்பாகத் தொகுந்து வழங்கினார். இவ்விழாவுக்கு அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆசிரியர்கள், அண்ணாமலை கனடாவளாக மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள் எனப் பலர் மண்டபம் நிறைந்து காணப்பட்டனர். விழா இறுதியில் அனைவரும் அதைமதியாக ஒழுங்குவரிசையில் வந்து, இந்நூற் பிரதிகளைப் பெற்றுச் சென்ற முறைமை பாராட்டத்தக்கது. அனைத்துக்கும் மேலாக விழா நிகழ்ச்சி நிரலிற் குறிப்பிட்டிருந்தவாறே சரியாக மாலை 5:30 மணிக்கு ஆரம்பித்து, குறிப்பிட்ட நேரத்தில் இவ்விழாவை நிறைவு செய்த பேராசிரியர் பாலசுந்தரம் அவர்களைப் பாராட்டவேண்டும். அவையோரை அன்போடு வரவேற்று, வேண்டிய சிற்றுண்டி, தேனீர் என்பன வழங்கி உபசரித்த பாங்கும் குறிப்பிடத்தக்கது.
நன்றி: இகுருவி