சுப்பர் சிங்கர் போட்டி நிகழ்வு விஜே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாள் தொடக்கம் ஈழத்தமிழர்கள் கவனம் முழுக்க அந்தப் பக்கமே சாய்ந்திருக்கிறது. கடந்த பல வருடங்களாக இந்திய சுப்பர் சிங்கர் பாடகர்கள் கனடிய மேடைகளை ஆக்கிரமித்திருப்பதும் எங்கள் பணம் படைத்த வர்த்தகர்களும் மக்களும் அவர்களை ஆராதனை செய்வதும் காசை அள்ளி வீசுவதும் எல்லோரும் அறிந்ததே. கனடாவில் வாழும் ஈழத்தமிழர்களில் இசையில் பாண்டித்தியம் பெற்றவர்களில்லையா? ஏன் எம் கலைஞர்களை ஆதரிக்காமல் இந்தியக் கலைஞர்களுக்கு மட்டும் கொட்டிக் கொடுக்கிறார்கள் என கலைஞர்களும் ஆதங்கப்படாமல் இல்லை.இதற்கிடையில் இளைஞர்கள் மட்டும்தான் பாடமுடியுமா ஏன் தரமான முதிய பாடகர்கள் எம்மிடம் இல்லையா என்ற கேள்விக்கு விடையளிப்பது போல் கோல்டன் சுப்பர் சிங்கர் என்ற இந்த இசைப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நியூ ஜாஸ்மின் மண்டபத்தில் வில்லா கருணா முதியோர் இல்ல நிர்வாகிகளால் நடத்தப்பட்டது.
55 வயதிற்கு மேற்பட்ட பாடகர்கள் பங்கேற்ற அந்த போட்டியில் சில பாடகர்கள் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியவர்கள். அதில் சீர்காழியின் குரலில் பாடிய தேவன் கோயில் மணியோசை என்ற பாடலும் ரிஆர் மகாலிங்கத்தின் குரலில் பாடிய சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி என்ற பாடலும் பலரின் பாராட்டுதலையும் பெற்றது. அவர்களே முதலாவது இரண்டாவது பரிசையும் தட்டிக் கொண்டார்கள். பாராட்டுக்குரியவர் இந்த முதியோர்களை நெறிப்படுத்திய பாடகர் கோபி. அந்த போட்டி நிகழ்வுக்கு பின்னணி இசை வழங்கிய பைரவி இசைக்குழுவினர் மிக புதியவர்களாயிருந்தபோதும் மிகவும் இதமாக இசை வழங்கியிருந்தார்கள். இன்னொரு முக்கிய அம்சம் அதற்கு ஒலியமைப்பை செய்த யதுவின் நுட்பமான ஒலிச்சேர்க்கை. கேட்பதற்கு மிக இதமாக இருந்தது. முதியவர்கள் பாடிய தரமான இசை நிகழ்விற்கு இளையவர்களையும் இந்தியக் கலைஞர்களுக்கு பணத்தை கொட்டி கொடுக்கும் வர்த்தகர்களையும் காணமுடியாமல் போனது பெரியதொரு குறையாக இருந்தது.
இம்முறை நடந்த நிகழ்வை அறியும் பல முதியவர்கள் அடுத்த வருடப் போட்டியில் நிச்சயம் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கலாம். நிச்சயம் இந்த இசைப்போட்டி வருடாவருடம் நடைபெற வேண்டும். கனடா வாழ் தமிழ் முதியவர்களுக்கு ஓர் கொண்டாட்டமாக அமையவேண்டும்
நன்றி:செய்தி.கொம்
நிகழ்வுகளின் ஒளிப்படங்கள் சிலவற்றைக் கீழே காண்கிறீர்கள்.